Flash News

aym shaik இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

HTML lessons

திங்கள், மே 30, 2011

கொழுப்பைக் கரைக்கும் பசலை!



கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. "என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்" என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.

பசலை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. பிரபலமானது 1800-களில். பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போனது. மக்கள் அதிக நேரம் வேகவைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.

இந்தக் கீரை ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.

பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.

சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.

கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும் போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே போதுமானது. கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.

உணவுச்சத்து:

இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:

கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.


கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு




இளைத்தவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்கு கொள்ளு...` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.

ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.

கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்...' என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா?

கொள்ளு- பருப்பு பொடி
தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 4 கப்
கொள்ளு - 1/2 கப்
மிளகு - 20 மிளகாய் வற்றல் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை

* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.

* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.

* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.

* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.

* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

உபயோகிக்கும் முறை

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.

பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி' சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக